புதுடெல்லி: கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் மொத்த சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் ரூ.2 லட்சம் கோடியை எட்டி உள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்துக்கான ஜிஎஸ்டி வரி வசூல் விவரங்களை மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதன்படி, ஆகஸ்ட் ஜிஎஸ்டி வசூல் ரூ.1,99,853 கோடி ஆகியுள்ளது.
இது 2025 ஆகஸ்ட் மாதத்தில் வசூலான ரூ.1,74,116 கோடியைவிட அதிகம். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கூடுதலாக வசூலான ரூ.31,795 கோடி வரி திருப்பித் தரப்பட்ட பின்னர், நிகர ஜிஎஸ்டி வசூல் ரூ.1,68,057 கோடியாக இருந்தது. 2025-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி வரி விகிதங்கள் குறிப்பிடத்தக்க அளவில் சீரமைக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாதாந்திர ஜிஎஸ்டி வசூல் தற்போது சுமார் ரூ.2 லட்சம் கோடி என்ற அளவில் உள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு செப். 3-ம் தேதி நடைபெற்ற 56-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், செப். 22 முதல் எளிமைப்படுத்தப்பட்ட 5 மற்றும் 18 சதவீதம் என இரு அடுக்கு ஜிஎஸ்டி வரி முறை அமலுக்கு வந்தது. இதுதவிர ஆடம்பரப் பொருட்கள் மற்றும் உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கும் பொருட்களுக்கு 40 சதவீத சிறப்பு வரி விகிதமும் அறிவிக்கப்பட்டது.
வரி நடைமுறைகளை மேலும் எளிதாக்குவது தொடர்பாக பல்வேறு திட்டங்களை பரிசீலிக்க, 57-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் வரும் 12-ம் தேதி டெல்லியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், வரி விகித சீரமைப்பின் தாக்கம் குறித்து ஆய்வு செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தியாவில் கேபிஎம்ஜி நிறுவனத்தின் மறைமுக வரிப் பிரிவு பங்குதாரரும், தேசியத் தலைவருமான அபிஷேக் ஜெயின் கூறும்போது, “ஒட்டுமொத்த ஜிஎஸ்டி வசூலில் 14.8 சதவீத வலுவான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
இதனுடன் முதல் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 7.8 சதவீத வளர்ச்சியும் பதிவாகியுள்ளது. புவிசார் அரசியல் மோதல்கள் மற்றும் உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற நிலை இருந்த போதிலும், இந்தியப் பொருளாதாரம் வலுவாக இருப்பதை இவை காட்டுகின்றன” என்றார்.

More Stories
பங்குச் சந்தை மோகத்தால் ரூ.2.3 கோடியை இழந்த இந்தியர்
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,800 குறைந்து ரூ. 1,11,600க்கு விற்பனை!
200 கி.மீ மைலேஜ் தரும் ‘ஏதர் கோனார்க்’ மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்