‘அன்பென்றாலே அம்மா’ சிறப்பு இசை நிகழ்ச்சியில் பாடிய இசைக் கலைஞர் ஹரிஷுக்கு ட்ரை ஆரா நிறுவனத்தின் நிறுவனர் ஆர்த்தி வெற்றிமாறன் நினைவுப் பரிசு வழங்கினார். உடன் நடிகை சுஹாசினி மணிரத்தினம், நடிகர் சேத்தன், இயக்குநர் தமிழ் ஆகியோர். | படம்: எஸ்.சத்தியசீலன் |
சென்னை: சென்னையில் நடந்த ‘அன்பென்றாலே அம்மா’ நிகழ்ச்சியில் பேசியட்ரை ஆரா நிறுவன தலைவர் ஆர்த்தி வெற்றிமாறன், “வயதான பெற்றோரை நம் சிந்தனை முறைக்கு மாற்றுவது நோக்கமா இருக்கக்கூடாது” என அறிவுறுத்தினார்.
தாய் என்ற உன்னதமான உறவை, தாய்மையை போற்றும் பாடல்கள், நெகிழ்ச்சியான உரையாடல்கள் மற்றும் மகிழ்ச்சியான அனுபவப் பகிர்வுகளுடன் கொண்டாடும் வகையில், ட்ரை ஆரா நிறுவனம் சார்பில் ‘அன்பென்றாலே அம்மா – அம்மா… உறவல்ல… உணர்வு’ எனும் சிறப்பு இசை நிகழ்ச்சி, சென்னை ஆர்.ஏ.புரத்தில் நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சியை ப்ளாக் ஷீப், நியூஸ் 7, சித்திரம் தொலைக்காட்சி, பிக் எஃப்.எம், சென்னை சாரீஸ், ப்ரவோக் ஆகிய நிறுவனங்களும் இணைந்து வழங்கின. பிரின்ட் பார்ட்னராக ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் இருந்தது.
இந்த தனித்துவமான இசை நிகழ்ச்சியில், தாய்மையின் மேன்மையை உணர்த்தும் திரையிசை பாடல்களை, சைந்தவி, நிவாஸ், ஷ்யாம் உள்ளிட்ட பின்னணிப் பாடகர்களும், இனியா ராஜகுமாரன், முத்தமிழன், பிரபாவதி உள்ளிட்ட வளரும் இசைக் கலைஞர்களும் பாடி பார்வையாளர்களை உணர்ச்சிவசப்பட செய்தனர்.
அதேபோல் சென்னையை சேர்ந்த 8 தாய்மார்களின் ஃபேஷன் வாக் நிகழ்ச்சியும் அங்கிருந்தோரை கவர்ந்தது. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வழக்கறிஞர் பேரறிவாளன் மற்றும் அவரது தாயார் அற்புதம்மாள் ஆகியோருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய ட்ரை ஆரா நிறுவனத்தின் தலைவர் ஆர்த்தி வெற்றிமாறன் பேசும்போது, “விலை உயர்ந்த பரிசுகளையோ அல்லது குறிப்பிட்ட இடைவெளியில் தொலைபேசி மூலம் அவர்களது நலனை விசாரிப்பதையோ மட்டும் வயதான பெற்றோர்கள் நம்மிடம் எதிர்பார்ப்பதில்லை.
வயதான காலத்தில் அவர்கள் திரும்பத் திரும்ப சொல்லும் கதைகளை ஆர்வத்துடன் கேட்பதும், எவ்விதமான திட்டமோ அல்லது கால அட்டவணையின்றி அவர்களுடன் நாம் நேரத்தை செலவிடவே அவர்கள் விரும்புகின்றனர்.
வயதான நம் பெற்றோரை நமது சிந்தனை முறைக்கு மாற்றுவது நமது நோக்கமாக இருக்கக்கூடாது. இன்றைய காலகட்ட கண்ணோட்டத்துக்கு ஏற்றவாறு, அவர்களது அனுபவத்தை மாற்றி எழுத முடியாது.
எனவே, அவர்கள் மீது அன்புடனும், நன்றி உணர்வுடனும் இருப்பதற்காக நம் மனதை விழிப்புணர்வுடன் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.
இந்நிகழ்வில் நேச்சுரல்ஸ் நிறுவனர் சி.கே.குமரவேல், வேல்டெக் கல்லூரி தலைவர் மகாலட்சுமி ரங்கராஜன், மேக்ஸ் கோல்டு நிறுவன தலைவர் தாயார் லதா பாய், மகள் பூஜா ஜலகண்டேஸ்வர் ராவ், நடிகர்கள் விக்ராந்த், ஹரிஷ் கல்யாண், சேத்தன், நடிகைகள் சுஹாசினி மணிரத்தினம், கவுதமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

More Stories
“அறவழி போராட்டத்துக்கு அனுமதி மறுப்பதா?” – தவெக அரசுக்கு கனிமொழி கண்டனம்
“துக்கம் அனுசரிக்கும் இடம் சர்க்கஸ் கூடமாக மாறியது” – நடிகை ராதிகா வேதனை
“ராமநாதபுர சிறுமி உயிரிழப்பில் உண்மை குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும்”: பிரேமலதா விஜயகாந்த்