May 28, 2026

ஹார்முஸ் நீரிணை | ஈரான் வெளியிட்ட அறிக்கை.. ஓமனுக்கு எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்!

20 சதவிகிதம் கச்சா எண்ணெய் வர்த்தகம் நடைபெறும் ஹார்முஸ் நீரிணையில், அமெரிக்காவும் ஈரானும் தங்கள் கட்டுப்பாட்டை நிலைநாட்டும் போட்டியில் ஈடுபட்டு வருகிறது

ஹார்முஸ் நீரிணை தொடர்பான விவகாரத்தில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ஓமனை எச்சரித்துள்ளார். ஓமன், அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளி நாடு என்பது குறிப்பிடத்தக்கது.

அணு ஆயுதம் தொடர்பாக அமெரிக்கா – இஸ்ரேல் – ஈரான் இடையே நடைபெற்ற போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து, போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகளுக்கும் பாகிஸ்தான் மத்தியஸ்தராக செயல்பட்டு வருகிறது. அணு ஆயுதம் தொடர்பாக ஈரானுக்கு எதிராக தொடங்கப்பட்ட தாக்குதல், தற்போது ஹார்முஸ் ஜலசந்தியின் பிரச்னையாகவும் மாறியுள்ளது. காரணம், 20 சதவிகிதம் கச்சா எண்ணெய் வர்த்தகம் நடைபெறும் ஹார்முஸ் நீரிணையில், அமெரிக்காவும் ஈரானும் தங்கள் கட்டுப்பாட்டை நிலைநாட்டும் போட்டியில் ஈடுபட்டு வருகிறது. இதனால், போரை நிரந்தரமாக நிறுத்தும் பேச்சுவார்த்தைகளும் இழுபறியாகவே இருந்து வருகிறது.

ஹார்முஸ்

ஹார்முஸ்கோப்புபடம்

இந்த நிலையில், ’போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு புதிய கட்டமைப்பின் ஒரு பகுதியாக, ஈரானும் ஓமனும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் கப்பல் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும்’ என ஈரான் தெரிவித்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், “யாராலும் அதைக் கட்டுப்படுத்த முடியாது. இது சர்வதேச கடல் பகுதி. ஓமனும் மற்றவர்களைப்போலவே நடந்துகொள்ளும். இல்லையென்றால், நாம் அவர்களைத் தகர்க்க வேண்டியிருக்கும்” என எச்சரித்துள்ளார். அமெரிக்காவின் மிக நெருங்கிய மற்றும் பழமையான வளைகுடா கூட்டாளிகளில் ஒன்றாக இருந்துவரும் ஓமன், அமெரிக்க இராணுவ ஒத்துழைப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love