March 12, 2026

ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக இந்திய கப்பல்கள் செல்ல ஈரான் அனுமதி!

ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல்கள் | கோப்புப் படம்

புதுடெல்லி: இந்தியக் கப்பல்கள் ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக பாதுகாப்பாக செல்ல ஈரான் அனுமதி வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரானுக்கு எதிராக கடந்த பிப். 28-ம் தேதி தாக்குதல்களைத் தொடங்கின. இதையடுத்து, இஸ்ரேலுக்கு எதிராகவும் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க நிலைகளைக் குறிவைத்தும் ஈரான் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதன் காரணமாக, ஈரானின் ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக நடந்து வந்த கப்பல் போக்குவரத்துக்கு ஈரான் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இது தொடர்பாக ஈரானின் கடற்படை தளபதி அலிரேசா தாங்சிரி வெளியிட்ட சமூக ஊடக பதிவில், ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்ல விரும்பும் கப்பல்கள் முதலில் ஈரானின் அனுமதியைப் பெற வேண்டும். இல்லையெனில் அவை ஈரானின் தாக்குதலுக்கான இலக்காக மாறக்கூடும்.

ஈரானின் எச்சரிக்கைகளை புறக்கணித்த எக்ஸ்பிரஸ் ரோம், மயூரி நரீ ஆகிய இரண்டு கப்பல்கள் புதன்கிழமை தாக்கப்பட்டன. அவர்கள் பொய்யான வாக்குறுதிகளை நம்பி எச்சரிக்கைகளை புறக்கணித்து ஜலசந்தியை கடக்க முயன்றார்கள்; ஆனால் அவர்கள் பிடிக்கப்பட்டனர். அந்த வழியாகச் செல்ல விரும்பும் எந்தக் கப்பலும் ஈரானிடமிருந்து அனுமதி பெற வேண்டும்,” என்று தெரிவித்திருந்தார்.

ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல்களுக்கான விதிமுறைகளை ஈரான் மேலும் கடுமைப்படுத்தியுள்ளதாகவும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் நலன்களுக்கு ஆதரவாக இல்லாத கப்பல்கள் மட்டுமே அந்த பாதை வழியாக பாதுகாப்பாக செல்லலாம் என்றும் ஈரான் அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், இந்தியக் கொடி ஏற்றப்பட்ட கப்பல்கள் ஹோர்முஸ் ஜலசந்தியை பாதுகாப்பாக கடந்து செல்ல அனுமதிக்க ஈரான் அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் நேற்று (புதன்கிழமை) வெளியிட்ட தகவலின்படி, பெர்ஷிய வளைகுடா பகுதியில் தற்போது 28 இந்தியக் கொடி ஏற்றப்பட்ட கப்பல்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் 24 கப்பல்கள் ஹோர்முஸ் ஜலசந்தியின் மேற்கு பகுதியில் 677 இந்திய கப்பல் பணியாளர்களுடன் உள்ளன. மேலும் 4 கப்பல்கள் ஜலசந்தியின் கிழக்கு பகுதியில் 101 இந்திய கப்பல் பணியாளர்களுடன் உள்ளன. அவர்களின் பாதுகாப்பு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் கடற்கரையும் ஓமான் நாட்டையும் பிரிக்கும் குறுகிய கடல் பாதையான ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக தினமும் 2 கோடிக்கும் அதிகமான பேரல்களுடன் கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படுகிறது. இது உலகளாவிய எண்ணெய் பயன்பாட்டில் ஐந்தில் ஒரு பகுதி; கடல் வழியாக நடைபெறும் எண்ணெய் வர்த்தகத்தில் நான்கில் ஒரு பகுதி. உலகின் திரவ இயற்கை எரிவாயு (LNG) வர்த்தகமும் குறிப்பிடத்தக்க அளவு இதே வழியாகச் செல்கிறது. இந்த போக்குவரத்து சிறிது நேரம் தடைப்பட்டாலும் அதன் தாக்கம் உலக நிதி சந்தைகள் முதல் குடும்பங்கள் வரை இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love