அகமதாபாத்: இந்திய கிரிக்கெட் அணி டி20 உலகக் கோப்பையை மூன்றாவது முறையாக வென்று வரலாறு படைத்தது. இதில் இந்திய அணியின் வெற்றியில் முக்கிய பங்களித்தவர் இஷான் கிஷன். இறுதிப் போட்டியில் 25 பந்துகளில் 54 ரன்களை அவர் விளாசியது குறிப்பிடத்தக்கது. இதோடு மூன்று கேட்ச்களையும் அவர் பிடித்திருந்தார்.
நியூஸிலாந்து அணி உடனான இறுதிப் போட்டிக்கு முதல் நாளன்று பயிற்சியில் ஈடுபட்டிருந்த இஷான் கிஷனுக்கு கார் விபத்தில் தனது சகோதரி (Cousin) மற்றும் அவரது கணவர் உயிரிழந்தது குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டது. துயர் மிகுந்த அந்நேரத்தில் தன் குடும்பத்துடன் இருக்க இஷான் கிஷன் விரும்பியுள்ளார். ஆனால், இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா உடன் பேசிய பிறகு தனது முடிவு இஷான் கிஷன் மாற்றிக் கொண்டுள்ளார்.
“சகோதரிக்காகவே இறுதிப் போட்டியில் விளையாடினேன். அனைத்தையும் விட அணிதான் முக்கியம் என ஹர்திக் சொன்னார். அதனால் அணியை நான் முன்னிறுத்தினேன். இந்த வெற்றியை எனது சகோதரிக்கு சமர்ப்பிக்கிறேன்” என்று ஆட்டத்துக்கு பிறகு இஷான் கிஷன் தெரிவித்தார்.
இந்த தொடருக்கு முன்னதாக சுமார் இரண்டு ஆண்டுகாலம் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை இஷான் கிஷன் இழந்திருந்தார். உள்ளூர் கிரிக்கெட்டில் அவரது செயல்பாடு காரணமாக டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் இரண்டாவது விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக அவர் சேர்க்கப்பட்டார். அவரது அபார ஃபார்ம் காரணமாக இந்த தொடரில் இந்தியா விளையாடிய அனைத்து ஆட்டங்களிலும் ஆடும் லெவனில் இடம்பெற்றார்.
இந்த தொடரில் 9 இன்னிங்ஸ் விளையாடிய இஷான் கிஷன், 317 ரன்கள் எடுத்தார். இதில் மூன்று அரை சதங்கள் அடங்கும். ‘நமது கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்கள் குறித்து சிந்திக்காமல், நமது பணியை செய்தால் போதும் என விராட் கோலி சொல்வார். அதை நான் பின்பற்றி வருகிறேன்’ என இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு தான் திரும்புவது குறித்த கேள்விக்கு இஷான் கிஷன் பதில் அளித்தார்.

More Stories
சிராஜின் மறக்க முடியாத ‘பவுல்டு’ – ஓவலில் இங்கிலாந்தின் இதயம் நொறுங்கிய இந்திய வெற்றி!
CWG 2026: மூட்டுவலியை வென்று பதக்கம் வென்ற சீமா
பாரா தடகளத்தில் தங்கம் வென்றார் இந்திய வீரர் திலீப் மஹது காவிட்