July 7, 2026

சிறுவர்களுக்கு வாகனம் ஓட்ட கொடுத்தால் பெற்றோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் எச்சரிக்கை

சென்னை: பைக் ரேஸில் ஈடு​படு​பவர்​கள் மீதும், சிறு​வர்​களிடம் வாக​னங்​களை கொடுக்​கும் பெற்றோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்​கப்​படும் என காவல் ஆணை​யர் அமல்​ராஜ் எச்​சரித்​துள்​ளார்.

சென்னை போக்​கு​வரத்து காவல் துறை​யினருடன், ஹுண்​டாய் மோட்​டார் இந்​தியா நிறு​வனம் இணைந்​து, சாலை போக்​கு​வரத்து மேம்​பாட்​டிற்​காக 300 தடுப்​பான்​களை (பேரி​கார்​டு​கள்) வழங்​கும் நிகழ்ச்சி சென்னை எழும்​பூர் ராஜரத்​தினம் மைதானத்​தில் நேற்று நடை​பெற்​றது.

இந்​நிகழ்ச்​சி​யில், சென்னை பெருநகர காவல் ஆணை​யர் அமல்​ராஜ் முதன்மை விருந்​தின​ராகக் கலந்து கொண்​டு, ஹுண்​டாய் நிறு​வனம் வழங்​கிய 200 இரும்பு தடுப்​பான்​கள், 50 ஸ்டீல் தடுப்​பான்​கள் மற்​றும் 50 மடிக்​கக்​கூடிய தடுப்​பான்​கள் என மொத்​தம் 300 பாது​காப்பு தடுப்​பான்​களைப் பெற்​றுக் கொண்டார்.

பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் காவல் ஆணை​யாளர் கூறிய​தாவது: சென்​னை​யில் சாலைப் பாது​காப்பை தொடர்ந்து வலுப்​படுத்தி வரு​கிறோம். தனி​யார் தொழில் நிறு​வனங்​களு​டன் இணைந்து இது​போன்ற பல்​வேறு சமூகநலப் பணி​களை மேற்​கொண்​டும் வரு​கிறோம்.

‘பாது​காப்​பான சாலைகள், பாது​காப்​பான உயிர்​கள்’ என்ற தொலை நோக்கு இலக்கை அடைவ​தில் சென்னை பெருநகர காவல் துறை எப்​போதும் உறு​தி​யாகச் செயல்​படும்.

சென்​னை​யில் கடந்த வாரம் இரு​வேறு இடங்​களில் ஆபத்​தான முறை​யில் பைக் ரேஸ் நடை​பெற்​றது. இது தொடர்​பான வீடியோக்​கள் சமூக வலை​தளங்​களி​லும் பரவியது. இதுகுறித்து உடனடி​யாக நடவடிக்கை எடுக்​கப்​பட்​டு, பைக் ரேஸில் ஈடு​பட்ட 17 வயது இளஞ்​சிறார்​கள் உட்பட தொடர்​புடைய அனை​வரும் கைது செய்​யப்​பட்​டனர்.

அதிவேக​மாக வாக​னம் ஓட்​டு​வது, பைக் ரேஸில் ஈடு​படு​வது போன்ற செயல்​கள் அவர்​களின் சொந்த உயிருக்​கும், பொது​மக்​களின் பாது​காப்​புக்​கும் மிகப்​பெரிய அச்​சுறுத்​தலாகும். எனவே இது​போன்ற ஆபத்​தான செயல்​களில் யாரும் ஈடுபட வேண்​டாம்.

பிறரை அச்​சுறுத்​தும் வகை​யில் அதிவேக​மாக வாக​னம் ஓட்​டி​னால் சம்​பந்​தப்​பட்​ட​வர்​கள் மீது கைது நடவடிக்கை எடுக்​கப்​படும்.

குறிப்​பாக, சிறு​வர்​களுக்கு வாக​னம் ஓட்​டக் கொடுத்​தால் பெற்​றோர்​கள் அல்​லது வாகன உரிமை​யாளர்​கள் மீதும் அதே நடவடிக்கை பாயும். இவ்​வாறு காவல் ஆணை​யர் அமல்​ராஜ் தெரி​வித்​தார்.

இந்​நிகழ்​வில் சென்னை போக்​கு​வரத்து காவல் கூடு​தல் ஆணை​யர் சாமுண்​டீஸ்​வரி, இணை ஆணை​யர் பகல​வன், துணை ஆணை​யர் மெஹலினா ஐடன், ஹுண்​டாய் மோட்​டார் இந்​தியா முழு நேர இயக்​குநரும், தலைமை உற்​பத்தி அதி​காரி​யு​மான சி.எஸ்​.கோ​பால கிருஷ்ணன், நிர்​வாக இயக்​குநர் யங்​மி​யுங் பார்க் மற்​றும் தலை​வர் விஜய​பாஸ்​கர் உள்​ளிட்ட பலர் கலந்து கொண்​டனர்.

Spread the love