வாஷிங்டன்: அமெரிக்காவின் எச்1பி விசா கட்டணத்தை ரூ.98 லட்சமாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. வெளிநாடுகளை சேர்ந்த திறன்வாய்ந்த தொழிலாளர்களுக்காக அமெரிக்க அரசு சார்பில் எச்1பி விசா வழங்கப்படுகிறது.
இந்த விசாவின் காலம் 3 ஆண்டுகள் ஆகும். இதனை 6 ஆண்டுகள் வரை நீட்டிக்க முடியும். ஓராண்டுக்கு 85,000 எச்1பி விசாக்களை மட்டுமே அமெரிக்கா வழங்குகிறது. இதில் 71 சதவீதத்தை இந்தியர்கள் பெறுகின்றனர். 12 சதவீத விசாக்களை சீனர்களும் இதர நாடுகளை சேர்ந்தோர் 17 சதவீத விசாக்களையும் பெறுகின்றனர்.
கடந்த 2025-ம் ஆண்டு ஜனவரியில் அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு எச் 1 பி விசா நடைமுறைகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு எச்1பி விசா கட்டணம் ரூ.1.9 லட்சத்தில் இருந்து ரூ.88 லட்சமாக உயர்த்தப்பட்டது. இதன்மூலம் அமெரிக்க நிறுவனங்களில் வெளிநாட்டு மென்பொறியாளர்கள் பணியில் சேருவதை தடுக்க மறைமுகமாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஆனால் அமெரிக்காவின் பல்வேறு நீதிமன்றங்கள் எச்1பி விசா கட்டண உயர்வுக்கு தடை விதித்தன. இதை எதிர்த்து அமெரிக்க அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த மேல்முறையீட்டு வழக்கு இன்னமும் நிலுவையில் இருக்கிறது. இதன்காரணமாக தற்போது எச்1பி விசாவுக்கு ரூ.1.9 லட்சம் முதல் ரூ.4.7 லட்சம் வரை மட்டுமே கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்த சூழலில் அமெரிக்காவின் உள்துறை பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் அதிபர் டொனால்டு ட்ரம்பிடம் புதிய பரிந்துரை சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. அதில், எச்1 பி விசா கட்டணத்தை ரூ.98 லட்சமாக அதிகரிக்க பரிந்துரை செய்யப்பட்டு இருக்கிறது. இந்த கட்டண உயர்வை நடப்பாண்டு இறுதிக்குள் அமல்படுத்த அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது.

More Stories
ஈரானுடன் வர்த்தக உறவு: 4 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை
கினியாவில் கனமழை: குப்பை மலை சரிந்து 22 பேர் உயிரிழப்பு
செங்கடல் பகுதியில் சவுதி எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்