August 5, 2026

அலுவலகங்கள், தேர்வுப் பொருட்களை கண்காணிக்கும் பணி: பாதுகாப்பு நிறுவனத்திடம் ஒப்படைக்க டெண்டர்

புதுடெல்லி: இந்த ஆண்டு தேசிய தேர்வு முகமை (என்டிஏ) நடத்திய நீட் தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததால் மறுதேர்வு நடத்தப்பட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தனது அலுவலகங்கள், ரகசிய ஆவணங்கள் மற்றும் தேர்வுப் பொருட்களை முழு நேரக்கண்காணிப்பின் கீழ் கொண்டு வர என்டிஏ நடவடிக்கை எடுத்து வருகிறது. மின்ட்டோ சாலையில் உள்ள தலைமையகம், ஆக்லாவில் உள்ள மண்டல அலுவலகம் மற்றும் பிற அலுவலகங்களின் பாதுகாப்பு பணிகளை நிர்வகிக்க தனியாக பாதுகாப்பு நிறுவனத்தை நியமிப்பதற்காக சுமார் ரூ.7.5 கோடி மதிப்பிலான டெண்டரை என்டிஏ கோரியுள்ளது.

ஜூலை 25-ம் தேதி வெளியிடப்பட்ட இந்த டெண்டருக்கு ஆகஸ்ட் 17-ம் தேதி பிற்பகல் 3 மணி வரை விண்ணப்பிக்கலாம். அச்சிடும் சேவைகளுக்கான டெண்டர் ஆகஸ்ட் 20 அன்று முடிவடைகிறது. தேர்வு செய்யப்படும் நிறுவனம், என்டிஏ ஊழியர்கள், பார்வையாளர்கள், வளாகம், ரகசியத் தேர்வுப் பொருட்கள், சர்வர் அறைகள், கிடங்குகள், பதிவு அறைகள் மற்றும் பிற முக்கிய வசதிகளைக் கண்காணிக்கும்.

இது வருகை மற்றும் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துதல், பணியாளர்கள் மற்றும் பார்வையாளர்களைச் சரிபார்த்தல், பதிவேடுகளைப் பராமரித்தல் மற்றும் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் அனுமதிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே நுழைவதை உறுதி செய்யும்.

Spread the love