துபாய்: அமெரிக்காவுடனான மோதல் முற்றியுள்ளதையடுத்து குவைத்தில் உள்ள அதன் ராணுவ தளங்கள் மீது ஈரான் உக்கிர தாக்குதல் நடத்தியுள்ளது.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே நீடித்து வரும் நேரடிப் போர், தற்போது அண்டை நாடுகளுக்கும் பரவி புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அமெரிக்காவின் தொடர் வான்வழித் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஈரான் கண்ணுக்கு கண் அதாவது ‘பழிக்குப்பழி’ வாங்கும் தனது ராணுவ நடவடிக்கையின் மூன்றாம் கட்டத்தைத் தொடங்கியுள்ளது.
ஈரான் தனது முதற்கட்ட நடவடிக்கையில் ஜோர்டானில் உள்ள பிரின்ஸ் ஹசன் விமானப்படை தளத்தைக் குறிவைத்து தாக்கியது. அங்குள்ள அமெரிக்காவின் பல ஆயுதக் கிடங்குகளும் எரிபொருள் நிலையங்களும் தீக்கிரையாக்கப்பட்டன. 2-வது கட்டமாக, பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படை மற்றும் விமானப்படைக்குச் சொந்தமான ஷேக் ஈசா ராணுவ தளம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.
அதன் தொடர்ச்சியாக நேற்று தனது மூன்றாம் கட்ட தாக்குதலை குவைத்தில் நடத்தியது. குறிப்பாக, குவைத்தில் உள்ள அமெரிக்காவின் முக்கிய ராணுவ தளங்கள் மீது ஈரான் நேற்று ஏவுகணைத் தாக்குதல்களை மேற்கொண்டது. இது, உலகளாவிய பாதுகாப்பு மற்றும் சர்வதேச கச்சா எண்ணெய் வர்த்தகத்துக்கு பெரும் அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளது.
இதுகுறித்து, அனடோலு செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, குவைத்தில் உள்ள அலி அல்-சலேம் விமானப்படை தளத்தில் இருந்த அமெரிக்காவின் ஏவுகணை எதிர்ப்பு ‘பாட்ரியாட்’ (Patriot) பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் எரிபொருள் சேமிப்பு நிலையங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டதாக ஈரான் புரட்சிகர ராணுவ படை (ஐஆர்ஜிசி) அறிவித்துள்ளது. மேலும், அகமது அல்-ஜாபர் விமானப்படை தளத்தில் இருந்த அமெரிக்காவின் அதிநவீன எஃப்.பி.எஸ் ரேடார் அமைப்பும் இந்தத் தாக்குதலில் தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

More Stories
ஐ.நா உறுப்பு நாடு உரிமைக்கான பாலஸ்தீன முயற்சிக்கு இந்தியா ஆதரவு
தாய்லாந்து கேளிக்கை விடுதி தீ விபத்தில் 27 பேர் உயிரிழப்பு
“ஹார்முஸ் ஜலசந்தி திறந்தே இருக்கும்; கப்பல்களுக்கு 20% கட்டணம்” – ட்ரம்ப் அறிவிப்பு