தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக காலியாக உள்ள 6 தொகுதிகளுக்கும் விரைவிலேயே இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளுங்கட்சியான தவெக சார்பில் களமிறங்கப்போகும் வேட்பாளர்கள் யார் என்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.
தவெகவின் 6 வேட்பாளர்கள் யார்?
இடைத்தேர்தலில் போட்டியிட ஆரம்பம் முதலே கட்சிக்காக உழைத்து வரும் நிர்வாகிகளுக்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என ஒரு தரப்பு வலியுறுத்தி வருகிறதாம். உங்களை நம்பி பதவியை ராஜினாமா செய்து வந்த எங்களுக்கே மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என அதிமுக மாஜிக்கள் கோரிக்கை விடுக்கின்றனராம். ஆனால், கள ஆய்வுகள் முடிவில் யாருக்கு சாதகமான சூழல் உள்ளதோ அவர்களுக்கு தான் இறுதி வாய்ப்பு என தவெக தலைமை ஏற்கனவே திட்டவட்டமாக தெரிவித்துவிட்டதாம். அந்த வகையில் பெரும்பாலான அதிமுக மாஜிக்களுக்கு வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது. அப்படி வாய்ப்பு பெறாதவர்களுக்கு இடைத்தேர்தலுக்குப் பிறகு ஏதேனும் வாரியத் தலைவர் பதவியை வழங்க ஆளுங்கட்சி பரிசீலிக்கிறதாம்.
வேட்பாளராக மல்லுக்கட்டும் நிர்வாகிகள்
திருச்சி கிழக்கு: முதலமைச்சர் விஜய் களமிறங்கி வெற்றி பெற்ற திருச்சி கிழக்கு தொகுதியில் நடிகர் ராகவா லாரன்ஸ் களமிறங்குவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. ஒருவேளை அவரது பெயர் வேட்பாளர் பட்டியலில் இடம்பெறாவிட்டால், அக்கட்சியின் மூத்த நிர்வாகிகளில் ஒருவரான கு. ப. கிருஷ்ணனின் மகன் சிரஞ்சீவி களமிறக்கப்படலாம் என கூறப்படுகிறது. இவர் தான் அந்த தொகுதி பொதுதேர்தலின் போது விஜய்க்கான பேக்-அப் வேட்பாளராக களமிறங்கியது குறிப்பிடத்தக்கது.
பெருந்துறை: இந்த தொகுதியில் பொதுத்தேர்தலின் போது தவெக சார்பில் களமிறங்கி வெற்றி வாய்ப்பை இழந்த அருணாசலம் மீண்டும் களமிறக்ப்பட உள்ளாராம். இவர் அமைச்சர் செங்கோட்டையனுக்கு நெருக்கமானவர் என கூறப்படுகிறது. இதுபோக எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்த ஜெயக்குமார் மற்றும் தவெகவின் ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் வெங்கடேஷ் ஆகிய இருவரும் வாய்ப்பினை பெற தீவிரமாக முயன்று வருகின்றனராம்.
தாராபுரம்: தவெகவின் கவுரி சித்ரா மற்றும் பதவியை ராஜினாமா செய்து அதிமுகவில் இணைந்த சத்யபாமா இடையே இடைத்தேர்தலுக்கான வய்ப்பினை பெறுவதில் கடும் போட்டி நிலவுகிறதாம்.
அம்பாசமுத்திரம்: பதவியை ராஜினாமா செய்த இசக்கி சுப்பையாவிற்கு எதிரான சூழல் களத்தில் நிலவுவதாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கு வாய்ப்பளிக்க தவெக தலைமை தயங்குகிறதாம். மேலும் நெல்லை தெற்கு மாவட்ட செயலாளர் ராஜகோபால் அல்லது கிழக்கு மாவட்ட செயலாளர் ஜாகிர் உசேன் ஆகிய இருவரில் ஒருவர் வேட்பாளராக களமிறங்கவும் வாய்ப்பு உள்ளதாம்.
மதுராந்தகம் யாருக்கு?
சட்டமன்ற பொதுத்தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் விசிக சார்பில் களமிறங்கிய முன்னாள் மத்திய அமைச்சர் தலித் எழில்மலையின் மகள் எழில் கேத்தரின் தோல்வியை தழுவினார். ஆனால், தற்போது மீண்டும் தங்களுக்கு அந்த தொகுதியை இடைத்தேர்தலில் ஒதுக்க வேண்டும் என தவெகவிடம் கோரிக்கை வைத்து வருகிறதாம். அதேநேரம், அதிமுக சார்பில் வென்று பதவியை ராஜினாமா செய்த, மரகதம் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கோரி வருகிறாராம். இதனால் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை பெற விரும்பும் தவெக, கூட்டணி கட்சிக்கு இந்த தொகுதியை ஒதுக்குமா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
விராலிமலை நிலவரம் என்ன?
தவெகவில் இணைந்தால் மீண்டும் விராலிமலையில் களமிறங்க விஜயபாஸ்கருக்கு வாய்ப்புள்ளதாகவே கூறப்படுகிறது. அதேநேரம், அவரல தனக்கு நெருக்கடி ஏற்படக்கூடும் என அமைச்சரும், புதுக்கோட்டை மாவட்ட செயலாளருமான முகமது பர்வேஸ் கருதுகிறாராம். இதனால் விஜய்பாஸ்கருக்கு எதிராக உள்ள வழக்குகளை குறிப்பிட்டு, அவருக்கு வாய்ப்பு வழங்க வேண்டாம் என வலியுறுத்தி வருகிறாராம்.
எதிர்க்கட்சிகளை சமாளிக்குமா தவெக?
இடைத்தேர்தல் மூலம் தனிப்பெரும்பான்மை பெற முடியாது என்றாலும், பொதுவெளியில் நேர் எதிரான கருத்துகளை கூறி வரும் சில ஆதரவு கட்சிகளை நம்பி இருக்க வேண்டிய சூழலை தவிர்க்க தவெக விரும்புகிறதாம். இதற்காக வெற்றியை மிகவும் தீவிரமாக எதிர்பார்க்கிறதாம். அதேநேரம், விஜயின் மாஸ் பிம்பத்தை உடைக்க இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற்றாக வேண்டும் என எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளனவாம். குறிப்பாக அதிமுக மற்றும் நாதக உடன் சில திரைமறைவு உடன்படிக்கைகளை ஏற்படுத்தி, குறிப்பிட்ட தொகுதிகளில் எதிர் வேட்பாளர்களை நிறுத்தாமல் களமிறங்கவும் திமுக தயாராகி வருகிறதாம்.

More Stories
சிலிண்டர் சப்பளைக்கு பிரச்னை இல்லை பழையபடி கிடைக்கும்
PF பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு..
போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு ஓட்டம் – முதல்வர் விஜய் பங்கேற்பு