May 21, 2026

நேரு உள்விளையாட்டு அரங்கில் விளையாட்டு வீரர்கள் தன்னை நேரில் அணுகலாம்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

சென்னை: சென்னை நேரு உள்​விளை​யாட்டு அரங்​கில் விளை​யாட்டு வீரர்கள் காலை 7 மணி முதல் 10 மணி வரை தன்னை நேரில் அணுகலாம் என அமைச்​சர் ஆதவ் அர்​ஜுனா தெரி​வித்​துள்​ளார்.

அகில இந்​திய அளவி​லான 18 வயதுக்​குட்​பட்​டோருக்​கான கூடைப்​பந்து போட்​டிகள் புதுச்​சேரி​யில் வரும் 22 முதல் 29-ம் தேதி வரை நடை​பெறுகிறது. இதையொட்​டி, பொதுப்​பணி மற்​றும் விளை​யாட்​டுத் துறை அமைச்​சர் ஆதவ் அர்​ஜூ​னா, சென்னை நேரு உள்​விளை​யாட்​டரங்​கில், நேற்று தமிழ்​நாடு ஜூனியர் கூடைப்​பந்து ஆண்​கள் மற்​றும் பெண்​கள் அணி​யினரை சந்​தித்து வாழ்த்து தெரி​வித்​தார்.

அப்​போது, அமைச்​சர் ஆதவ் அர்​ஜுனா பேசி​ய​தாவது: விளை​யாட்​டில் ஆர்​வ​முள்ள வீரர், வீராங்​க​னை​களை கண்​டறிந்து விளை​யாட்டு மேம்​பாட்​டுத் துறை​யின் மூலம் அவர்​களை சாதனை​யாளர்​களாக மாற்ற தொலைநோக்கு செயல்​திட்​டங்​களை முதல்​வர் வகுத்து வரு​கிறார்.

அந்​தவகை​யில் உங்​கள் தேவை​கள் அனைத்​தை​யும் செய்​துதர நான் தயா​ராக உள்​ளேன். விளை​யாட்டு பயிற்சி நேரங்​கள் முடிந்து சிறிதுநேர ஓய்​வுக்கு பின் உடனடி​யாக படிப்​பில் கவனம் செலுத்த வேண்​டும்.

விளை​யாட்டு வீரர்​கள் அனை​வரும் உயர் கல்​வியை கண்​டிப்​பாக நிறைவுசெய்​தால்​தான், விளை​யாட்​டுத் துறை பணி ஒதுக்​கீட்​டின் போது உயர் அலு​வலர்​கள் நிலை​யி​லான பணியை தேர்வு செய்ய முடி​யும். இவ்​வாறு அவர் கூறி​னார்.

தொடர்ந்​து, அமைச்​சர் ஆதவ் அர்​ஜுனா வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில் கூறப்​பட்​டிருப்​ப​தாவது: ஒலிம்​பிக் போட்​டிகளில் தமிழகத்​தின் விளை​யாட்டு வீரர், வீராங்​க​னை​கள் பதக்​கங்​களை வெல்ல செயல்​திட்​டங்​கள் வகுக்​கப்​பட்டு வரு​கிறது.

இந்த இலக்கை அடைந்​திடும் வகை​யில் எனது அலு​வலக பணி​களை நாள்​தோறும் காலை 7 மணிக்கு நேரு உள்​விளை​யாட்டு அரங்​கில் தொடங்​கி,

விளை​யாட்​டுத் துறை உயர் அலுவலர்​கள், விளை​யாட்டு வீரர்​கள், விளை​யாட்டு சங்க நிர்​வாகி​களு​டன் இணைந்து தேவை​யான நடவடிக்​கைகளை மேற்​கொள்ள வழி​வகை செய்​யப்​பட்​டுள்​ளது.

எனவே காலை 7 மணி முதல் 10 மணி வரை விளை​யாட்​டுத் துறை தொடர்​பாக, சென்னை நேரு உள்​விளை​யாட்டு அரங்​கில் விளை​யாட்டு வீரர், வீராங்​க​னை​கள், விளை​யாட்டு சங்க நிர்​வாகி​கள் எவ்​வித சிர​முமின்றி எளி​தாக என்னை அணுகி தங்​களது கோரிக்​கைகளை தெரிவிக்​கலாம். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

Spread the love