March 24, 2026

புதுச்சத்திரம் அருகே அனுமதியின்றி விவசாய தோட்டத்தில் இருந்த பனைமரங்களை வெட்டியவர்கள் மீது, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் ஏளூரை அடுத்த பெரும்பாளிப்பட்டியில் மெய்யழகன், அருண் ஆகியோருக்கு சொந்தமான 10 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்த விவசாய நிலத்தில் 50க்கும் மேற்பட்ட பனைமரங்கள் உள்ளன.

அந்த பனை மரங்கள் அனுமதி இன்றி வெட்டப்படுவதாக வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து நாமக்கல் வட்டாட்சியர் மோகன்ராஜ், ஏளூர் விஏஓ சுரேஷ் உள்ளிட்ட வருவாய் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட விவசாய நிலத்திற்கு நேரடியாக சென்றனர்.

அவர்களைக் கண்டதும், அங்கு பனை மரங்களை வெட்டிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மரம் வெட்டும் கருவிகளை எடுத்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர். அதன் பிறகு அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், மெய்யழகன், அருண் ஆகியோருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் இருந்த 29 பனை மரங்கள் வெட்டி எடுக்கப்பட்டது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து நில உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, விஏஓ சுரேஷ் புதுச்சத்திரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காவல்துறையினர் சம்மந்தப்பட்ட நில உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி, நேற்று 2-ம் தேதி, வெளியிட்டுள்ள அறிக்கையில், முன் அனுமதி பெறாமல் பனை மரங்களை வெட்டக்கூடாது என்றும், மீறி பனை மரத்தை வெட்டும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love