June 27, 2026

“அடுத்த ஆண்டு இந்தியா வருகிறார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்” – மார்கோ ரூபியோ தகவல்

வாஷிங்டன்: அடுத்த ஆண்டு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இந்தியாவுக்கு வர உள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தி நிறுவனத்திடம் அவர் கூறியதாவது: அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் அதிபரின் இந்திய பயணம் கைகூடும் என நாங்கள் நம்புகிறோம். நிச்சயம் அதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்தியா, அமெரிக்க தேசத்தின் நெருங்கிய நட்பு நாடுகளின் வட்டத்தில் உள்ளது.

பிரதமருக்கும், அதிபருக்கும் இடையிலான நட்பு மிகவும் நெருக்கமானது. இது அரசாங்க ரீதியாக மிகவும் முக்கியம் எனக் கருதுகிறேன் என்று ரூபியோ தெரிவித்துள்ளார்.

கடைசியாக கடந்த 2020 பிப்ரவரியில் ட்ரம்ப், இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். அகமதாபாத் நகரில் ‘நமஸ்தே ட்ரம்ப்’ நிகழ்வில் பிரதமர் மோடி உடன் அவர் பங்கேற்றார். தொடர்ந்து டெல்லியில் இருநாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர்.

வர்த்தக ஒப்பந்தம்

இந்தியா – அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் இறுதிக் கட்டத்தை நெருங்கி உள்ளது என்று மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல், கடந்த சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்தார். அமெரிக்க பிரதிநிதிகளுடன் டெல்லியில் நடத்திய 2 நாள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் தகவலை அமைச்சர் தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 2-வது முறை​யாக பதவி​யேற்ற பின், உலக நாடு​களுக்​குப் பரஸ்பர வரி​வி​திப்பு முறையை கொண்டு வந்​தார். அமெரிக்க பொருட்​களுக்கு இந்​தியா போன்ற நாடு​கள் 100 சதவீதத்​துக்​கும் அதி​க​மாக வரி விதிப்​ப​தாக அதிபர் ட்ரம்ப் குற்​றம் சாட்​டி​னார்.

இந்​தி​யா​வில் இருந்து அமெரிக்​கா​வில் இறக்​குமதி செய்​யப்​படும் பொருட்​களுக்கு 25 சதவீத வரி விதிக்​கப்​பட்டு வந்​தது. ரஷ்யாவில் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ததற்கு அபராதமாக இந்​தி​யா​வுக்கு கூடு​தலாக 25 சதவீத வரி விதிப்​ப​தாக ட்ரம்ப் அறி​வித்​தார். இதனால் இந்​தி​யா​வுக்கு அமெரிக்கா விதித்த இறக்​குமதி வரி 50 சதவீத​மாக உயர்ந்​தது. இது அமெரிக்காவுக்கான இந்​திய ஏற்​றும​தி​யைக் கடுமை​யாக பாதித்தது. இதன் காரண​மாக இந்​தியா – அமெரிக்கா இடையேயான வர்த்தகப் பேச்​சு​வார்த்தை தடைபட்​டது.

இதையடுத்து ரஷ்​யா​விடம் இருந்து கச்சா எண்​ணெய் இறக்குமதியை இந்​தியா குறைக்​கத் தொடங்​கியது. அதன்​பின் இந்​தியா – அமெரிக்கா வர்த்​தகம் தொடர்​பான பேச்சுவார்த்தைகள் மீண்​டும் தொடங்​கின. அடுத்த சில ஆண்டுகளில் அமெரிக்​கா​வில் இருந்து 500 பில்​லியன் டாலர் அளவுக்கு இறக்​குமதி செய்​ய​வும், முதலீடு செய்​ய​வும் இந்​தியா உறு​தி​யளித்​துள்​ளது. இதன் காரண​மாக, இந்​திய ஏற்​றும​தி​கள் மீது விதிக்​கப்​பட்ட வரி 25 சதவீதத்​தில் இருந்து 18 சதவீத​மாக குறைக்க அமெரிக்கா ஒப்​புக்கொண்​டது.

அண்மையில் பிரான்​ஸில் நடை​பெற்ற ஜி7 கூட்​டத்​தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் – பிரதமர் மோடி ஆகியோர் நீண்ட இடைவெளிக்​குப் பின் நேரில் சந்​தித்து பேசினர். அப்​போது இந்​தியா – அமெரிக்கா இடையே மிகச் சிறந்த வர்த்தக ஒப்​பந்​தம் கையெழுத்​தாகும் என்று அதிபர் ட்ரம்ப் அறி​வித்​தார். இந்தச் சூழலில் அடுத்த ஆண்டு இந்தியாவுக்கு ட்ரம்ப் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்ரம்ப் பெயரில் சாலை!

ஹைதராபாத் நகரில் அமைந்துள்ள சாலைக்கு ‘டொனால்டு ட்ரம்ப் அவென்யூ’ எனப் பெயரிட்டுள்ளது தெலங்கானா மாநில அரசு. இதற்கு ட்ரூத் சோஷியல் சமூக வலைதளத்தில் ட்ரம்ப் நன்றி தெரிவித்துள்ளார். இந்த கவுரவத்தை பெறுகின்ற முதல் அமெரிக்க அதிபர் என்று அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love