திண்டுக்கல்: பழநி முருகன் கோயில் மற்றும் உப கோயிலுக்கு சொந்தமான சொத்துக்கள் மற்றும் ஆவணங்கள் தொடர்பாக திருச்சி மண்டல கூடுதல் ஆணையர் பொன்மணி ஐஏஎஸ் இன்று (ஆக.13) காலை ஆய்வு மேற்கொண்டார். மேலும், ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் நிலங்கள், மீட்கப்பட்ட சொத்துக்கள் குறித்தும் கேட்டறிந்தார்.
அறநிலையத்துறை நிர்வாக வசதிக்காக வடக்கு (சென்னை) மற்றும் தெற்கு (திருச்சி) என 2 புதிய மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, அவற்றைக் கண்காணிக்க மூத்த ஐஏஎஸ் அந்தஸ்திலான கூடுதல் ஆணையர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
அதன்படி, திருச்சி மண்டல கூடுதல் ஆணையராக பொன்மணி ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதன்பின், அவர் நேற்று பழநி வந்தார். படிப்பாதை வழியாக நடந்தே மலைக்கோயிலுக்கு சென்ற அவர் நேற்றும், இன்று காலையும் சுவாமி தரிசனம் செய்தார்.
பின்னர், கீழே வந்த அவர் பழநி தேவஸ்தான அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடத்தினார். அப்போது, பழநி முருகன் கோயில் மற்றும் உப கோயிலுக்கு சொந்தமான சொத்துக்கள் மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்தார். மேலும், ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் நிலங்கள், மீட்கப்பட்ட சொத்துக்கள் குறித்தும் அவர் கேட்டறிந்தார்.
ஆய்வின் போது, கோயில் இணை ஆணையர் (பொ) வெங்கடேஷ், கோயில் சொத்துக்களை ஆய்வு செய்ய அமைத்துள்ள புதிய குழுவில் இடம்பெற்றுள்ள சிறப்பு வட்டாட்சியர் லதா, கோயில் நிலங்கள் கண்காணிப்பாளர் முருகானந்தம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

More Stories
“காவிரி விவகாரத்தில் இன உணர்வாளர்களை தூண்டிவிட்டு பந்த்” – கர்நாடகா முதல்வர் மீது பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு
அனைத்து குவாரிகளையும் அரசே நடத்தக் கோரிய வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
டிஎன்பிஎஸ்சி குரூப்-2, 2ஏ காலியிடங்களை 3,000 ஆக உயர்த்த அன்புமணி வலியுறுத்தல்