February 13, 2026

‘நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு?’ – விருதுநகரில் பாஜக நூதன பிரச்சாரம்

‘நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு?’ - விருதுநகரில் பாஜக நூதன பிரச்சாரம்

விருதுநகர்: ‘நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு?’ என்ற கேள்வியுடன் விருதுநகரில் பாஜகவினர் நூதனமான முறையில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்குவதையொட்டி வாக்காளர்களை கவர ஒவ்வொரு கட்சியும் பல்வேறு முறைகளில் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளன.

விருதுநகரில் பாஜகவினர் நூதனமான முறையில் சுவரொட்டிகளை ஒட்டி பிரச்சாரம் செய்து வருகின்றனர். 100-க்கும் மேற்பட்ட இடங்களில் ‘நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு?’ என்ற கேள்வியுடன் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.

ஒவ்வொரு சுவரொட்டியிலும் அடிப்படை பிரச்சினைகளை குறிப்பிட்டு கேள்வி எழுப்பியுள்ளனர். அந்த சுவரொட்டிகளில், ‘சுகாதாரம் காற்றில் – வியாதிகள் வீட்டில், தூங்கும் அரசே விழித்தெழு, கண்ணீராக மாறிய குடிநீர் – தீராத தாகத்தில் விருதுநகர் மக்கள், ஆமை வேகத்தில் பாதாள சாக்கடைப் பணி – அவதியில் விருதுநகர் மக்கள், வீதிக்கு வீதி மதுக்கடை – வீட்டுக்கு வீடு அச்சம், சாலைகளா மரணக்குழிகளா – சீர்கெட்டு கிடக்கும் விருதுநகரின் உள்கட்டமைப்பு, புத்தகம் சுமந்த கைகளில் கஞ்சாவா – இதுதான் திமுகவின் விடியல் ஆட்சியா, திமுக ஆட்சியின் அவலம் – கேள்விக்குறியில் பெண்கள் பாதுகாப்பு’ உள்ளிட்ட வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

Spread the love