May 17, 2026

கோவில் ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. அகவிலைப்படி 60% ஆக உயர்த்தி இந்து அறநிலையத்துறை உத்தரவு

தமிழகத்தில் இந்து அறநிலையத்துறையின் கீழ் பணிபுரியும் கோவில் ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி உத்தரவு

கோவில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டு உள்ளது. நிரந்தர கோயில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி 58 சதவிகிதத்திலிருந்து 60 சதவிகிதமாக உயர்த்தி இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டதன் தொடர்ச்சியாக நிரந்தர கோயில் பணியாளர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

  

இதுதொடர்பாக வெளியான சுற்றறிக்கையில், தமிழ்நாடு அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கும் போது திருக்கோயில் பணியாளர்களுக்கும் அகவிலைப்படி உயர்வினை இந்து சமய அறநிலையத்துறை ஆணையரே வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கோயில் பணியாளர்களுக்கு தமிழக அரசாணையின் படி திருத்திய ஊதிய விகிதம் மற்றும் இதர படிகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அந்த சுற்றறிக்கையில் ரூ.1,00,000 மற்றும் அதற்கு மேல் உதவித் தொகை நிர்ணய வருமானம் வரப்பெறும் திருக்கோயில்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 01.07.2025 முதல் அகவிலைப்படியினை 58 விழுக்காடாக உயர்த்தி வழங்கிட அனுமதி வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த அரசாணையில் தமிழ்நாடு மாநில அரசு பணியாளர்களுக்கு கடந்த 01.01.2026 முதல் அகவிலைப்படி 2 விழுக்காடு உயர்வு செய்யப்பட்டு 60 விழுக்காடாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கொடுக்கப்பட்ட அரசாணைகளின்படி ரூ.1,00,000/- மற்றும் அதற்கு மேல் உதவித்தொகை நிர்ணய வருமானம் வரப்பெறும் திருக்கோயில்களில் பணிபுரிந்து வரும் நிரந்தர திருக்கோயில் பணியாளர்களுக்கு 01.01.2026 முதல் அகவிலைப்படியினை 58 விழுக்காட்டிலிருந்து 2 விழுக்காடு உயர்வு செய்து 60 விழுக்காடாக வழங்கிட நிபந்தனைகளுக்குட்பட்டு அனுமதி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிபந்தனைகள்

இந்த அகவிலைப்படி உயர்வு சில நிபந்தைக்களுக்கு உட்பட்டு வழங்கப்படுவதாகவே அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி

1. இந்த அகவிலைப்படி உத்தரவானது பகுதி நேர பணியாளர்கள், தினக்கூலி பணியாளர்கள், தொகுப்பூதிய பணியாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்கள் பணியிடப்பட்டியலில் இடம் பெறாதாவர்களுக்கு பொருந்தாது.

2. அந்தந்த திருக்கோயில் நிதிநிலைமை மற்றும் விதிமுறைகளுக்கு ஏற்ப அரசினால் நிர்ணயிக்கப்பட்டுள்ள சம்பளச் செலவின உச்சவரம்பிற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

3. அனைத்து சார்நிலை அலுவலர்கள் தத்தம் அதிகார வரம்புக்குட்பட்ட திருக்கோயில்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு முறையாக அமலாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

கோவில் ஊழியர்களின் கோரிக்கைகள்

  • தமிழ்நாட்டில் அறநிலையத்துறையின் கீழ் சுமார் 46 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த கோவில்களில் அர்ச்சகர்கள், அலுவலக பணியாளர்கள், இசைக்கலைஞர்கள், பாதுகாப்பு மற்றும் தூய்மை பணியாளர்கள் என ஆயிரக்கணக்கானோர் பணியாற்றி வருகின்றனர்.
  • கடந்த 2025 -ஆம் ஆண்டின் நிலவரப்படி 1300 தற்காலிக கோவில் ஊழியர்களை நிரந்தரப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.
  • மேலும் இந்த ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கையான பண்டிகை கால போனஸ் மற்றும் அக விலைப்படி உயர்வு கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
  • இங்கே இருக்கக்கூடிய கோவில்களில் பல ஆண்டுகளாக காலி பணியிடங்கள் நிரப்பப்படாததால் இப்போது வேலை செய்து கொண்டிருக்கும் ஊழியர்களுக்கு கூடுதல் பணி சுமை ஏற்பட்டுள்ளதாகும் குற்றச்சாட்டுகள் இழந்த வண்ணம் இருக்கின்றன.
Spread the love