அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்துள்ள நிலையில் மாவட்ட செயலாளர்களுடன் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனையில் ஈடுபட உள்ளார். இதனிடையில் புதுச்சேரி அதிமுக செயலாளர் அன்பழகன் தவெக கடுமையாக விமர்சனம் செய்து பேசியுள்ளது கவனம் ஈர்த்து வருகிறது.
அதிமுகவை பலவீனப்படுத்தி வருகிறார் தவெக தலைவர் விஜய் என இபிஎஸ் தரப்பினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். அதிமுகவில் அதிருப்தி அணியில் இருக்கும் எம்எல்ஏக்களின் ஆதரவினை தவெக பெற்றுள்ளது கடுமையான விமர்சனங்களை கிளப்பியுள்ளது. இதனையடுத்து அவர்களுக்கு அமைச்சரவையில் பங்கு கொடுக்கக்கூடாது என பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரி அதிமுக செயலாளர் அன்பழகன் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
அதிமுகவில் எஸ்.பி. வேலுமணி, சி.பி. சண்முகம் தரப்பிலான அதிமுகவை சார்ந்த 25 சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழக வெற்றி கழகத்துக்கு ஆதரவாக சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் ஆதரவாக வாக்களித்தனர். இதற்கு கட்சியின் பொதுச்செயலாளரான இபிஎஸ் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். அதோடு தவெகவுக்கு ஆதரவு தெரிவித்த எம்எல்ஏக்களின் கட்சி பொறுப்பை பறித்தும் நடவடிக்கையில் ஈடுபட்டார்.
இந்நிலையில் இபிஎஸ் மற்றும் அவரது தரப்பினர் அதிமுகவில் பிளவு ஏற்படுவதற்கு முதல்வர் விஜய் தான் காரணமென குற்றம்சாட்டி வருகின்றனர். அந்த வகையில் அதிமுக புதுச்சேரி செயலாளர் அன்பழகன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தூய ஆட்சியை கொடுப்போம் என்று தேர்தல் பிரச்சாரத்தில் பொய் பரப்புரை செய்து தவெக மக்களை ஏமாற்றி ஆட்சியில் அமர்ந்ததும் கேடு கெட்டத்தனமான குதிரை பேர அரசியலை செய்துள்ளது.
அமைச்சர் பதவி தருவோம் என்று கழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஆசை காமித்துள்ளது. இதன் மூலமாக அதிமுகவை பலவீனப்படுத்தும் செயலில் விஜய் ஈடுபடுகிறார். தமிழகத்தின் சபாநாயகர் சட்டமன்ற விதிகளுக்கு உட்படாமல் காலம் தாழ்த்தி வருகிறார். நம்முடைய தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மத்தியில் திட்டமிட்டு பிளவை ஏற்படுத்தும் சதி செயலை சட்டப்பரவை தலைவர் செய்து வருகிறார். இது ஜனநாயக விரோதமான செயலாகும்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர், இந்த இயக்கத்தை வைச்சு பிசினஸ் நடத்துறீங்க. உங்களுடைய உண்மையான சுயரூபம் இப்போ தெரிய வந்துருச்சு. இந்த கட்சியை அவமதித்த ஒரு நபருடைய அரசுக்கு நீங்கள் ஆதரவு அளித்து இருக்கிறீர்கள் எனவும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் அதிமுகவின் புதுச்சேரி செயலாளர் அன்பழகன்.
இதனிடையில் நேற்றைய தினம் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்ட எடப்பாடி பழனிசாமி, அதிமுக அதிருப்தியை அணியை பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அழைப்பு கொடுத்துள்ளார். அதோடு தவெகவின் செயல்பாட்டையும் கடுமையாக விமர்சனம் செய்து அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார். இதனையடுத்து இன்று மாவட்ட செயலாளர்களுடன் இபிஎஸ் இன்று ஆலோசனையில் ஈடுபட உள்ளார். அதிமுக தலைமை அலுவலகத்தில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

More Stories
உச்சத்தை எட்டியுள்ள உட்கட்சி மோதல்.. இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் – எடப்பாடியின் முடிவு என்ன?
அதிமுக ஆதரவு தவெகவுக்கு தேவையே கிடையாது.. மக்கள் தீர்ப்புக்கு விரோதமானது.. கார்த்திக் சிதம்பரம்
“முகத்தை மூடிக்கொண்டு வந்த நபர் யாரென்று தெளிவுபடுத்துக” – விஜய்க்கு பிரேமலதா வலியுறுத்தல்