May 21, 2026

அப்பா, வளமான, வலிமையான இந்தியா குறித்த உங்கள் கனவை நினைவாக்குவேன்” – ராகுல் காந்தி

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 35வது நினைவு தினத்ததை முன்னிட்டு அவரது நினைவிடத்திற்குச் சென்று மலர் அஞ்சலி செலுத்திய அவரது மகனும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, அப்பா, நீங்கள் கனவு கண்ட திறமையான, வளமான, வலிமையான இந்தியாவை உருவாக்கும் பொறுப்பை நான் முழுமையாக எனது தோள்களில் சுமப்பேன் என தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, தேர்தல் பிரச்சாரத்துக்காக கடந்த 1991ம் ஆண்டு தமிழ்நாடு வந்தபோது ஸ்ரீவில்லிபுத்தூரில் மனித வெடிகுண்டால் கொல்லப்பட்டார். அவரது மறைவின் 35வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதை முன்னிட்டு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தியின் நினைவிடமான வீர் பூமியில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதையடுத்து, ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “அப்பா, நீங்கள் கனவு கண்ட திறமையான, வளமான, வலிமையான இந்தியாவை உருவாக்கும் பொறுப்பை நான் முழுமையாக எனது தோள்களில் சுமப்பேன். உங்கள் போதனைகள், உங்கள் விழுமியங்கள், உங்கள் நினைவுகள் எப்போதும் என்னுடன் நிலைத்திருக்கும்” என தெரிவித்துள்ளார்.

மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நவீன இந்தியாவுக்கான அடித்தளத்தை அமைப்பதில் ராஜீவ் காந்தி ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க பங்களிப்பை அளித்துள்ளார். இளம் இந்தியாவின் ஆற்றலை முழுமையாக நம்பிய அவர், வாக்களிக்கும் வயதை 21-ல் இருந்து 18 ஆக குறைத்தார். கிராம அளவில் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் நோக்கில் பஞ்சாயத்து அமைப்புகளுக்கு அதிகாரம் அளித்தார்.

தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம், கணினி மயமாக்கல் ஆகியற்றின் வாயிலாக இந்தியாவை ஒரு புதிய சகாப்தத்தை நோக்கி வழிநடத்தினார். அமைதி மற்றும் பேச்சுவார்த்தைகள் வாயிலாக நாட்டில் ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட அவர் மேற்கொண்ட முயற்சிகள் என்றென்றும் நினைவுகூரப்படும்” என தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில், “முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாளில் அஞ்சலிகள்” என தெரிவித்துள்ளார்.

Spread the love