February 23, 2026

உலகப்பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயருக்கு, மாசி மாதம் 2வது ஞாயிற்றுக்கிழமையையொட்டி இன்று சிறப்பு அபிஷேகம் மற்றும் முத்தங்கி அலங்காரம் நடைபெற்றது.

நாமக்கல் நகரின் மையத்தில், நரசிம்ம சுவாமி மற்றும் நாமகிரித்தாயார் கோயில் எதிரில் ஒரே கல்லினால் 18அடி உயரத்தில் உருவான ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. இங்கு வணங்கிய நிலையில் சாந்த சொரூபியாக ஆஞ்சநேயர், பக்தர்களுக்கு இரவு பகல் 24 மணி நேரமும் அருள் பாலித்து வருகிறார்.

இன்று மாசி மாதம் 2வது ஞாயிற்றுக்கிழமையையொட்டி, ஆஞ்சநேயருக்கு அதிகாலை 9 மணிக்கு 1,008 வடை மாலை அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து, காலை 10 மணிக்கு, நல்லெண்ணெய், மஞ்சள், சந்தனம், சீயக்காய், திருமஞ்சள், 1,008 லிட்டர் பால், தயிர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட நறுமணப் பொருட்களால் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. கனகாபிஷேகத்துடன் அபிஷேகம் நிறைவு பெற்றது.

பின்னர், சுவாமிக்கு விலை உயர்ந்த முத்துக்களால் தொடுக்கப்பட்ட, சிறப்பு முத்தங்கி நடைபெற்றது. பகல் 1 மணியளவில் திரை விலக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

பல்வேறு பகுதிகளில் இருந்து குடும்பத்துடன் கோயிலுக்கு வந்த பக்தர்கள், நீண்ட கியூவில் நின்று சுவாமியை வழிபட்டனர். நாமக்கல் கோட்டை பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் உதவி கமிஷனர் இளையராஜா மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.

image.png
Spread the love