September 15, 2026

சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயில் சித்திரை பெருவிழா திருத்தேரோட்டம் கோலாகலம்

கும்பகோணம்: கும்பகோணம் வட்டம் சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் சித்திரை பெருவிழாவையொட்டி இன்று திருத்தேரோட்டம் நடைபெற்றது.

இந்த கோயிலில் இந்தப் பெருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு இந்த விழா கடந்த ஏப்.24-ம் தேதி முதல் மே 4-ம் தேதி வரை நடைபெறுகிறது. பிரதான விழாவான கொடியேற்றம் கடந்த ஏப்.24-ம் தேதி நடைபெற்றது. தொடர்ந்து விநாயகர், வள்ளி- தேவசேனா உடனாய சுப்ரமணிய சுவாமி, சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் உற்சவர் மண்டபத்துக்கு எழுந்தருளினர். ஏப்.25-ம் தேதி முதல் மே 1-ம் தேதி வரை சுவாமிகள் பல்வேறு வாகனங்கள் வீதியுலா புறப்பாடு நடைபெற்றது.

பிரதான விழாவான இன்று (மே 2-ம் தேதி) திருத்தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக காலை 7:00 மணி அளவில் சுவாமிகள் படிச்சட்டத்தில் விசாக நட்சத்திரத்தில் திருத்தேரில் எழுந்தருளினர். தொடர்ந்து காலை 8.30 மணிக்கு திருத்தேரோட்டம் நடைபெற்றது.

தேரில் வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வடம்பிடித்து இழுத்துச் சென்றனர். இதில் தக்கார் சுவாமிநாதன், அறநிலையத்துறை துணை ஆணையர் உமாதேவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மே 3-ம் தேதி சபாபதி பாகுலேய சுப்பிரமணியர் (நடராஜர் பெருமான்) சிவகாமி அம்பாள், மாணிக்கவாசகர் தேர்தல் பார்த்தல் திருவீதி வைபவம் ஊடல், மே 4- ம் தேதி சுவாமி யதாஸ்தானம் செல்லுதல் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Spread the love