சென்னை: உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.2.50 கோடி பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நேற்று மாலை 5 மணியளவில் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதிக்கு உட்பட்ட மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அந்த வழியாக வந்த வாகனம் ஒன்றை மறித்து சோதித்தனர். அதில், கட்டுக்கட்டாக ரூ.2.50 கோடி பணம் இருந்தது தெரிந்தது. அதுகுறித்து விசாரித்தபோது, அந்த பணம் ஏடிஎம் இயந்திரங்களில் நிரப்புவதற்காக கொண்டு செல்லப்பட்ட பணம் என வாகனத்தில் இருந்தவர்கள் தெரிவித்தனர். ஆனால், பணத்துக்கான ஆவணங்கள் அவர்களிடம் இல்லை.
இதையடுத்து, அந்த பணத்தை பறிமுதல் செய்து, வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். ரூ.1.91 கோடி பறிமுதல் சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் 3 பறக்கும் படைகள் என்ற வீதம், 48 பறக்கும் படைகளும், 3 நிலையான கண்காணிப்புக் குழுக்கள் என்ற வீதம், 48 நிலையான கண்காணிப்புக் குழுக்களும் ஏற்படுத்தப்பட்டு, மூன்று சுழற்சி முறைகளில் பணிகளை மேற்கொள்வர்.
இந்த குழுக்கள் தேர்தல் விதிமீறல்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை கண்காணிக்கும். அதன்படி, வாகன சோதனையின்போது பறக்கும் படை குழுவால் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரொக்கப் பணம் மயிலாப்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் ரூ.75ஆயிரம் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினரால் ராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் ரூ.1.91கோடி என மொத்தம் ரூ.1 கோடியே 91 லட்சத்து 75ஆயிரம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

More Stories
15-08-2026
15-08-2026
பழனி