February 7, 2026

தமிழகம் வரும் பிரதமர் அறுபடை வீடுகளையும் சுற்றிப் பார்க்க வேண்டும்: அமைச்சர் சேகர்பாபு

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைச்சர் சேகர்பாபு கோரிக்கை.

Minister sekarbabu criticized EPS

தமிழகம் வரும் பிரதமர் அறுபடை வீடுகளையும் சுற்றிப் பார்க்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்த சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்து சமய அறநிலைத்துறை அமைச்சரும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும தலைவருமான சேகர்பாபு, திரு.வி.க. நகர் சட்டமன்றத் தொகுதியில் கட்டப்பட்டு வரும் முதல்வர் படைப்பகங்களின் முன்னேற்றப் பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர்பாபு பேசுகையில், ”சென்னையில் 38 முதல்வர் படைப்பகங்கள் உருவாகிகொண்டு இருக்கிறது.

தேர்தல் அறிவிப்பிற்கு முன்பே, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிரதமருக்கு தமிழகத்தில் இருக்கக்கூடிய கடவுளை வழிபட வேண்டும் என எண்ணம் தோன்றி உள்ளது. தமிழகத்தில் இருக்கக்கூடிய முருகர்கள் அவ்வளவு சக்தி வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள்.

இவர்கள் திருப்பரங்குன்றம் விவகாரத்தைக் கையில் எடுத்துப் பார்த்தார்கள், முருகர் பக்தர்கள் மாநாடு நடத்திப் பார்த்தார்கள். ஆனால் என்னப்பன் தமிழ்க் கடவுள் முருகன் எங்கள் முதல்வரோடுதான் கைகோர்த்து நின்றுள்ளார்.

எனவே, தமிழகம் வரும் பிரதமருக்கு வைக்கின்ற ஒரு வேண்டுகோள். அறுபடை வீடுகளையும் சுற்றிப் பார்த்து அதிலும் குறிப்பாக பழனியை சென்றுப் பார்த்து, அங்கு நிர்வாகம் எப்படி இருக்கிறது என்பதை தெரிந்துக் கொள்ள வேண்டும்.

சமீபத்தில் குடமுழுக்கு முடிந்த திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கும் சென்று சுற்றிப் பார்க்க வேண்டும். அறுபடை வீடுகளுக்கும் சென்று வர பிரதமருக்கு கோரிக்கை வைக்கிறேன்.

திருச்செந்தூர் கட்டுமானப் பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது. திருச்செந்தூர் வருபவர்களுக்கு அறுபடை வீடுகளையும் ஒரே நேரத்தில் தரிசிப்பதற்கு ஏதுவாக அறுபடை முருகனையும் உருவாக்கிக் கொண்டிருக்கின்றோம்.

இறுதி கட்டப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றது. அந்தப் பணிகள் மட்டும்தான் ஏப்ரல் மாதத்தில் நிறைவடையும், மற்ற பணிகள் அனைத்தும் இந்த மாதத்தில் நிறைவடைந்துவிடும்” என்றார்.

Spread the love