திருச்சி: திருச்சியை அடுத்த துவாக்குடி அரசு மாதிரிப் பள்ளியில் படித்து நீட் தேர்வு எழுதிய 74 மாணவர்களில் 32 பேருக்கு, முதல் முயற்சியிலேயே அரசு மருத்துவ கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர வாய்ப்பு கிடைத்துள்ளது.
துவாக்குடியில் உள்ள அரசு மாதிரிப் பள்ளியில் அறிவியல், கணிதம் பாடப்பிரிவில் 2025-26 கல்வி ஆண்டில் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களில் 74 பேருக்கு பாடத்திட்டத்துடன் நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டன.
இந்நிலையில் நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட தர வரிசை பட்டியலில் இப்பள்ளி மாணவர் எஸ்.மாதவ்(564 மதிப்பெண்கள்) உட்பட 4 மாணவர்களுக்கு அகில இந்திய ஒதுக்கீட்டில் மருத்துவக் கல்வி பயிலும் வாய்ப்பும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டின் கீழ் 28 பேருக்கு தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் வாய்ப்பும் உருவாகி உள்ளது.
இதில், பட்டியலின மாணவர் பிரிவில் சஞ்சய் தரன் மாநிலத்தில் 2-ம் இடம், பழங்குடியினர் பிரிவில் மாணவி தீபிகா 3-ம் இடம், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் பிரிவில் வனிஷா 5-ம் இடம், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் ஜனுஜா 7-ம் இடம், பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் கே.கோபிகிருஷ்ணன் 15-ம் இடம் என 5 பேர் மாநில அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.
நிகழாண்டில் இப்பள்ளியில் பயின்ற 32 பேர் முதல் முயற்சியிலேயே எம்பிபிஎஸ் படிப்பில் சேரும் வாய்ப்பை பெற உள்ளனர். இது தவிர, அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் பிடிஎஸ் படிப்பிலும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் சீட் கிடைக்க வாய்ப்புள்ளது.
இதுகுறித்து கல்வியாளர்கள் இந்து தமிழ் நாளிதழிடம் கூறியதாவது: துவாக்குடி அரசு மாதிரிப் பள்ளியில் பயின்று நீட் தேர்வெழுதிய 74 மாணவர்களில் 32 பேர் முதல் முயற்சியிலேயே நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று எம்பிபிஎஸ் படிப்பில் சேர உள்ளனர்.
பொதுவாக போட்டித் தேர்வு பயிற்சி மையங்களின் வெற்றி சதவீதம் சராசரியாக 10 முதல் 15 சதவீதம்தான் இருக்கும். ஆனால், துவாக்குடி அரசு பயிற்சி மையத்தின் வெற்றி கிட்டத்தட்ட 50 சதவீதமாக இருப்பது மிகப்பெரும் சாதனை. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

More Stories
10-ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் ஆக.12 முதல் விநியோகம்
பொறியியல் பொதுக் கலந்தாய்விற்கு விண்ணப்பிக்காத மாணவர்கள் ஆக.31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்!
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை.யில் மாணவர் சேர்க்கை செப்.15 வரை நீட்டிப்பு