புளோரிடா: ஈரான் மீது தொடர்ந்து 13-வது இரவாக அமெரிக்க ராணுவம் தாக்குதல் மேற்கொண்டதாக அந்நாட்டு ராணுவ மத்திய போர் கட்டளையகம் கூறியுள்ளது.
மேற்காசியாவில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது.
இடைக்கால போர் நிறுத்த உடன்பாட்டை மீறி ஹார்முஸ் ஜலசந்தியில் எண்ணெய்க் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதால், அந்நாட்டின் மீது அமெரிக்க ராணுவம் கடந்த சில வாரங்களாக கடும் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது.
ஈரானின் உள்கட்டமைப்புகளை குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்படுகிறது. இந்நிலையில், தொடர்ந்து 13-வது இரவாக ஈரான் மீது தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க ராணுவம் கூறியுள்ளது.
ஈரானின் ராணுவ தளங்களை இலக்காக வைத்து மீண்டும் தாக்குதலை தொடுத்தோம். (இந்த தாக்குதல் இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடந்துள்ளது). தொடர்ந்து 13-வது இரவாக ஈரான் மீது இந்த தாக்குதலை நடத்தி உள்ளோம்.
ஹார்முஸ் ஜலசந்தியில் சரக்கு கப்பல் போக்குவரத்துக்கு அச்சுறுத்தலாக உள்ள ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் செயல்பாட்டை மட்டுப்படுத்தும் வகையில் இந்த தாக்குதலை மேற்கொண்டோம். இதற்கு ஈரான் தான் காரணம் என்று அந்நாட்டு ராணுவ மத்திய போர் கட்டளையகம் தெரிவித்துள்ளது.
மேலும், ஈரானின் துறைமுகங்களில் இருந்து சரக்கு கப்பல் வந்து செல்லவும் தங்கள் தரப்பில் தடுக்கப்பட்டுள்ளதக அமெரிக்க ராணுவம் கூறியுள்ளது.
சேதமடையும் கப்பலுக்கு இழப்பீடு
“அமெரிக்காவின் வசம் உள்ள மற்றும் அதன் கட்டுப்பாட்டில் இருக்கும் ஈரானின் பணத்தை கொண்டு சேதமடையும் கப்பலுக்கு வழங்கப்படும். இதுவே நியாயமான மற்றும் சமமான செயலாகும்” என்று சமூக வலைதள பதிவில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தினால் அமெரிக்கா அதற்கான பதிலடியை கொடுக்கும். ஏவுகணை, ட்ரோன் அல்லது வேறு விதமான ஆயுதங்களை கொண்டு ஈரான் ஏதேனும் ஒரு கப்பல் மீது தாக்குதல் மேற்கொண்டால், அதற்கு இணையாக ஈரானில் உள்ள ஏதேனும் ஒரு பாலம் அல்லது மினி நிலையம் மீது தாக்குதல் மேற்கொள்வோம்.
அந்நாட்டின் தலைநகர் தெஹ்ரான் அல்லது அதையொட்டி உள்ள பகுதியில் உள்ள உள்கட்டமைப்பு மீது எங்களது குறி இருக்கும் என்று ட்ரம்ப் தெரிவித்தார். மேலும், அணு ஆயுதங்களை தங்கள் வசம் வைத்திருப்பது குறித்து ஈரான் சிந்திக்க கூட அமெரிக்கா அனுமதிக்காது என்று அவர் கூறினார்.

More Stories
ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அச்சுறுத்தல் எதிரொலி: நடுவழியில் திரும்பிச் சென்ற 2 இந்திய சரக்கு கப்பல்கள்
ரூ.1.5 கோடி வைர நகை திருடிய இந்தியருக்கு 2 ஆண்டு சிறை: சிங்கப்பூர் நீதிமன்றம் தீர்ப்பு
பிரிட்டனின் முதல் ஏஐ துறை அமைச்சராக இந்தியரான கனிஷ்கா நாராயண் நியமனம்