Follow Us
சென்னை: பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய விஜய் தலைமையிலான அரசு இரும்புக்கரம் கொண்டு குற்றவாளிகளை அடக்க வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே 11 வயது சிறுமி, 62 வயதுடைய முதியவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல் அந்தோணி ராஜ் என்கிற விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவமும், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே குபேந்திரன் என்கிற 17 வயது சிறுவன் முன் விரோதம் காரணமாக நள்ளிரவில் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவமும் மக்களிடையே அச்சத்தையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும் சென்னை ராயபுரத்தில் உள்ள ஆர்.எஸ்.ஆர்.எம் அரசு மருத்துவமனையில் பிறந்து 9 நாட்களே ஆன குழந்தை கடத்தப்பட்ட சம்பவமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொலைக்காட்சிகளை பார்த்தாலே கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, குழந்தைகள் மீதான குற்றங்கள் போன்ற செய்திகள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருப்பது தமிழகத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமை குறித்து மக்கள் மத்தியில் கடும் கவலையை உருவாக்கியுள்ளது.
“சிறு குழந்தைகளின் ஆதரவோடு ஆட்சிக்கு வந்துள்ளேன்” என்று பெருமையோடு கூறும் முதல்வர் விஜய், பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக சட்டம் மற்றும் ஒழுங்கு, காவல்துறை நிர்வாகத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த அரசு இரும்புக்கரம் கொண்டு குற்றவாளிகளை அடக்க வேண்டும் என தேமுதிக சார்பாக கேட்டுக் கொள்கிறோம். இல்லை என்றால், “கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்” செய்தால் பயனில்லை.” என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

More Stories
சொந்த பாஸ்போர்ட்டில் வெளிநாட்டுப் பயணம்; அமைச்சர்கள் கீர்த்தனா, ராஜ்மோகனுக்கு மத்திய அரசு நோட்டீஸ்
சகோதரர் குடும்பத்தை தாக்கிய வழக்கு: சமரச தீர்வு மையத்தில் அமைச்சர் மரிய வில்சன் ஆஜர்
எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்