August 10, 2026

அருணாச்சலில் 27 இடங்கள் இந்திய வரைபடத்தில் முறைப்படி பதிவு: சீனா சாடல்

சென்னை: அருணாச்சல் பிரதேச மாநிலத்தில் உள்ள 27 இடங்களை அதன் அடையாள பெயரில் வரைபடத்தில் முறைப்படி பதிவு செய்தது இந்தியா. இதனை கடுமையாக சாடியுள்ளது சீனா. அது குறித்து விரிவாக பார்ப்போம்.

எல்லையோர மாநிலமான அருணாச்சலில் உள்ள அந்த 27 இடங்களில் நிலங்ககள், கணவாய்கள், ஒரு ஏரி மற்றும் ஒரு நினைவுச் சின்னமும் அடங்கும். இந்தியா – சீனா எல்லையோர பகுதிகளில் உள்ள இடங்களுக்கு பெயர் மாற்றம் செய்ய தொடர்ச்சியாக சீனா முயற்சித்து வரும் நிலையில் இந்தியா இந்த நடவடிக்கையை மேற்கொண்டது. இதை சீனா இப்போது சாடியுள்ளது.

இது குறித்து சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ‘தி குளோபல் டைம்ஸ்’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

“எல்லையோர பகுதியில் சீனா புவியியல் பெயர்களைச் சீரமைக்கும் பணிகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது. சீனா மற்றும் இந்தியா இடையிலான உறவு மேம்படுவதற்கான அறிகுறிகள் தென்படும் சூழலில், எல்லையில் நிலவும் சூழலை மோசமாக்கும் வகையில் இந்தியாவின் இந்த ஒருதலைபட்ச நடவடிக்கை அமைந்துள்ளது. இத்தகைய நடவடிக்கை இருதரப்பு உறவுகளின் சமூகத்துக்கு உதவாது” என்று சிங்குவா பல்கலைக்கழக தேசிய உத்திசார் நிறுவனத்தின் ஆராய்ச்சித் துறை இயக்குநர் கியான் ஃபெங் தெரிவித்துள்ளார்.

“சீனா மற்றும் இந்தியா இடையிலான உறவு இந்த தருணத்தில் நிலையாக உள்ளது. இருதரப்பு உறவை மேம்படுத்துவதில் சீனா உறுதியாக உள்ளது. இருந்தாலும் 27 இடங்களை அதன் வரைபடத்தில் முறைப்படி பதிவு செய்த இந்தியாவின் இந்த நடவடிக்கை சட்டப்பூர்வமான பலன் தராது. இது நிர்வாக ரீதியாக பலன் தரலாம்.

இருதரப்பு விவகாரத்தில் பேச்சுவார்த்தை சுமுகத் தீர்வு கிடைக்கும். மாறாக இது போல எந்தவொரு தரப்பும் மேற்கொள்ளும் தன்னிச்சையான நடவடிக்கையால் எல்லையில் பதற்றம் ஏற்பட வழிவகுக்கும்” என்று ஷாங்காய் சர்வதேச ஆய்வுகள் பல்கலைக்கழக பேராசிரியர் குவா சீதாங் தெரிவித்துள்ளார்.

இதுவரை 112 இடங்களின் பெயரை மாற்றி உள்ள சீனா

கடந்த 2017 முதல் ஆறு கட்டங்களாக எல்லையோர பகுதியில் உள்ள கிராமங்கள், கணவாய்கள், ஆறுகள், சிகரங்கள் என சுமார் 112 இடங்களின் பெயரை மாற்றி சீனா அங்கீகரித்துள்ளது. இந்த சூழலில் கடந்த மாதம் அருணாச்சல் பிரதேசத்தை சீனா அங்கீகரிக்கவில்லை என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Spread the love