August 12, 2026

சிவகங்கை அருகே 70 ஆண்டுகளாக பட்டா இன்றி வசிக்கும் ஆதிதிராவிடர் மக்கள்

சிவகங்கை: சிவகங்கை அருகே 70 ஆண்டுகளாக ஆதிதிராவிடர் குடும்பத்தினர் பட்டா கிடைக்காமல் பரிதவிக்கின்றனர். நில வகைப்பாட்டை மாற்று வதில் அதிகாரிகள் தொடர்ந்து மெத்தனம் காட்டுவதாகப் புகார் எழுந்துள்ளது.

சிவகங்கை அருகே அரசனி முத்துப்பட்டி ஊராட்சி நெம்மேனி கிராமத்தில் 30-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் குடும்பங்கள் வசிக்கின்றன. அவர்கள் 70 ஆண்டு களுக்கும் மேலாக அப்பகுதியில் வீடு கட்டிக் குடியிருந்து வருகின்றனர்.

அங்கு அரசு அங்கன்வாடி மையம், கோயில் போன்றவை கட்டப்பட்டுள்ளன. அந்தக் கிராம மக்கள் வசிக்கும் பகுதி வருவாய்த் துறை ஆவணத்தில் களத்துப் பொட்டல் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால், அங்குள்ள வீடுகளுக்கு பட்டா இல்லை. சிலர் வங்கிக் கடன் பெற்று வீடு கட்ட முடியாமல் ஓட்டு வீடுகளிலேயே வசிக்கின்றனர்.

இதையடுத்து, நில வகைப்பாட்டை மாற்றி பட்டா வழங்குமாறு கிராம நிர்வாக அலுவலர் முதல் தமிழக முதல்வர் வரை பலமுறை மனுக் கொடுத்தும் நடவடிக்கை இல்லாததால் கிராம மக்கள் வேதனையில் உள்ளனர்.

மேலும், அக்கிராமத்துக்குச் செல்லும் சாலை சேதமடைந்து மிகவும் மோசமாக உள்ளதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் கூறியதாவது: 70 ஆண்டுகளாக இங்குதான் குடியி ருக்கிறோம். எங்கள் பகுதியை தவறுதலாக ஆவணத்தில் களத்துப் பொட்டல் எனக் குறிப்பிட் டுள்ளனர். இதனால், பட்டா பெற முடியவில்லை.

மனு கொடுக்கும் சமயங்களில் மட்டும் எங்கள் கிராமத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து பட்டா கொடுக்க நடவடிக்கை எடுப்பதாகக் கூறுகின்றனர். அதன்பின்னர், கண்டுகொள்வதில்லை.

இன்னும் எத்தனை தலைமுறைதான் பட்டாவுக்காக காத்திருக்க வேண்டியநிலை உள்ளதோ தெரியவில்லை. மிக மோசமாக உள்ள சாலையையும் சீரமைக்காமல் உள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘நில வகைப்பாட்டை மாற்றி பட்டா கொடுப்பது தொடர்பாக அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளோம். நில வகைப்பாட்டை மாற்றி அறிவிப்பு வந்ததும் பட்டாக்கள் வழங்கப்படும்’ என்றனர்.

Spread the love