July 21, 2026

ரூ100 கோடி நில மோசடி வழக்கு

 பழனி சார் பதிவாளர் அலுவலகத்தில்,

 பதிவுத்துறை உயர்மட்ட குழு விசாரணை

 நேற்று நடத்தினர்

 பழனி ஜூலை 21

 பழனியில் ரூபாய் 100   கோடி நில மோசடி வழக்கில் பழனி சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவுத்துறை உயர்மட்ட குழு அதிகாரிகள் நேற்று விசாரணை மேற்கொண்டனர். பழனியில் தண்டபாணி சாமி மட அறக்கட்டளைக்கு சொந்தமான ரூபாய் 100 கோடி மதிப்பிலான ஒரு ஏக்கர்  40சென்ட் நிலம் உள்ளது. அந்நிலம் கோவில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. இந்நிலையில் கடந்த 6ஆம் தேதி பழனி சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூபாய் இரண்டு கோடிக்கு, தனியாருக்கு அந்த நிலம் பத்திரப்பதிவு செய்யப்பட்டது. இதையொட்டி பழனி கோயில் நிர்வாகம் அளித்த புகாரின் பேரில், நிலத்தை பதிவு செய்த பழனி சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் நிலத்தை விற்ற விழுப்புரத்தைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் முருகதாஸ், நிலத்தை வாங்கிய உடுமலைப்பேட்டை பாப்பான்குளம் வெள்ளத்துரை, டி கே என் புதூர் சேதுபதி ஆகிய நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் இந்த வழக்கின் எதிரொலியாக பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மாவட்ட பதிவாளர் சசிகலா ஆகியோர் பணி நீக்கம்  செய்யப்பட்டனர். இந்நிலையில் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. போலீஸ் சூப்பிரண்டு ஷாஜிதா  தலைமையில் போலீசார் திண்டுக்கல்லில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று பழனி சார் பதிவாளர் அலுவலகத்திற்கு, பழனி நிலம் மோசடி வழக்கில் முழுமையாக ஆய்வு செய்து உண்மையை கண்டறிவதற்காக, பதிவுத்துறை சார்பில் கூடுதல், பதிவுத்துறை தலைவர் சுதா மல்யா, நாமக்கல் மண்டல உதவி பதிவுத்துறை தலைவர் பூங்கொடி, சென்னை பதிவுத்துறை மாவட்ட பதிவாளர் கண்ணன் ஆகியோர் நேற்று சோதனை செய்தனர். அலுவலக பணியாளரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.

Spread the love